Sep 6, 2026 - 10:42 AM

நாட்டின் முந்திரித் துறையின் வளர்ச்சி மற்றும் பயிர்ச்செய்கை கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் இக்கலந்தரையாடல் இடம்பெற்றது.
தேசிய முந்திரித் துறையின் வளர்ச்சிக்காக தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, பெருந்தோட்டப் பயிராக முந்திரித் துறை எதிர்கொள்ளும் தற்போதைய மற்றும் எதிர்கால தொழில்நுட்ப, ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டு சவால்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, உள்நாட்டு முந்திரித் துறையின் தற்போதைய நிலைமை, முறைப்படி பயிரிடப்படும் நிலப்பரப்பு, அந்த நிலப்பரப்பை அதிகரித்தல் மற்றும் அதற்கான பின்னணி குறித்து முதன்மையாக ஆராயப்பட்டது.
இலங்கையில் ஒரு முந்திரி மரத்திலிருந்து கிடைக்கும் சராசரி மகசூல் சுமார் 4-5 கிலோகிராம் மட்டுமே என்றும், ஏனைய நாடுகளில் நவீன தொழில்நுட்ப முறைகள் மூலம் 20 கிலோகிராம் வரை மகசூலைப் பெறக்கூடிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
நாட்டில் மேம்பட்ட முந்திரிச் செய்கைக்கு ஆண்டிற்கு சுமார் ஒரு மில்லியன் கன்றுகள் தேவைப்பட்டாலும், தற்போது 3-4 லட்சம் கன்றுகளே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்குத் தீர்வாக, அடுத்த 10 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு தேவையான ஒட்டுக்கன்றுகளை உருவாக்க அறிவியல் முறைகள் அவசியம் என சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
முந்திரிச் செய்கையில் புதிய வகைகளைக் கண்டறிதல், மகசூலை அதிகரித்தல், தேவையான ஒட்டுக்கன்றுகள் மற்றும் தரமான வித உற்பத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப இடைவெளிகளை நிரப்புதல் மற்றும் மேம்பட்ட திசு வளர்ப்பு மூலமான இனப்பெருக்கத்திற்கு அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆதரவு வழங்கப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், ஆராய்ச்சி முன்னுரிமைப் பகுதிகளை இனங்கண்டு, அதனுடன் தொடர்புடைய இலக்கு ஆராய்ச்சிகளுக்காக நிதியுதவி வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரச மற்றும் தனியார் துறையினருக்கு இடையே மூலோபாய உறவுகளை ஏற்படுத்துதல் மற்றும் வலுவான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ் ஏனைய நாடுகளிலிருந்து அதிக மகசூல் தரும் மரபணுப் பொருட்களை இறக்குமதி செய்யும் பொறிமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
மேலும், முந்திரி மரத்தின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட உப தயாரிப்புகளை உருவாக்குதல், பயிர் பன்முகப்படுத்தலுக்குச் செல்லுதல் உள்ளிட்ட பயிர்ச்செய்கை குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.



























