Sep 6, 2026 - 01:07 PM

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
தணமல்வில - அம்பேகமுவ வீதியின் அரம்பேகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 43 வயதுடைய பொலிஸ் சாஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தணமல்வில திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, காமினிபுர - தணமல்வில பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சாஜன்ட் ஒருவராவார்.
அதேபோல், கடவத்தை நகரின் வெளிவட்ட வீதியிலுள்ள உடற்பயிற்சி பூங்காவிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கடவத்தை திசையை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும், அதற்கு எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்தை - கோனஹேன பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபராவார்.
சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மொனராகலை - பதுளை வீதியின் தொலொபோவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தான்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரொருவரும் பெண்ணொருவரும் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அந்தப் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.



























