Sep 8, 2026 - 09:27 AM

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கூற்றை சிலர் தவறாகச் சித்தரித்து வருவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அண்மையில் புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கூற்றுத் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இருப்பினும், ஜனாதிபதியின் கூற்றுக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் விமர்சனங்களுக்கு, நேற்று (07) இரவு டிவி தெரணவில் ஒளிபரப்பான '360' நடப்பு விவகார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பின்வருமாறு பதிலளித்தார்.
கேள்வி - நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டிய ஒரு பின்னணியில், தீர்ப்பு கிடைத்தவுடனேயே அதை உடனடியாக நிறைவேற்றுவோம் என்று நாட்டின் ஜனாதிபதி கூறுகிறார். அது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும், ஜனாதிபதி செய்யக் கூடாத ஒரு கூற்று என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?
பதில் - "இல்லை... பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் இதனைக் கொண்டு வருகிறோம். எனவே, உயர்நீதிமன்றம் என்ன தீர்மானத்தை வழங்கினாலும், உயர்நீதிமன்றம் வழங்கக்கூடிய முதலாவது தீர்மானம் என்னவென்றால், இதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றல் மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு. அல்லது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் போதுமானது, சர்ஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்பதாகும். எனவே, இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே கட்டாயமாக இடம்பெறுவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவது மட்டுமே."
கேள்வி - பாராளுமன்றத்திற்குக் கொண்டுவந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டதால் மட்டும் சட்டமூலம் நிறைவேறிவிடாது. ஒருவேளை உயர்நீதிமன்றம் இதனை சர்ஜன வாக்கெடுப்புக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினால், அரசாங்கத்தால் இதனை பாராளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற முடியாது. அரசாங்கத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மட்டுமே பெற முடியும்.
பதில் - "எங்களது ஜனாதிபதி கூறியதற்கும் இதற்கும் இடையே எந்தவொரு முரண்பாடும் இல்லை. பாராளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றுவது பற்றி மட்டுமே ஜனாதிபதி கூறுகிறார். உயர்நீதிமன்றம் சர்ஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்று கூறினால், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை..." என்றார்.



























