Sep 8, 2026 - 11:20 AM

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமாகவே நடத்தப்படுவர். சட்டம் தன் கடமையைச் சுயாதீனமாகச் செய்யும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (07) ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டும். விசாரணைகளின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.
சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். எனவே, ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள், ஆளுநராக இருந்தவர்கள் அல்லது தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டமே பொருந்தும்.
நாமல் ராஜபக்ஷ தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், சமூகம் மத்தியில் பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. அதேவேளையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் எதிரணியிலும் ஆளுங்கட்சியிலும் இருந்தபோது ராஜபக்ஷ குடும்பத்தினரைப் 'திருடர்கள்' எனப் பகிரங்கமாக விமர்சித்தார்.
அவ்வாறு ராஜபக்ஷக்களைத் 'திருடர்கள்' என்று கூறிய ரணில், கடந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்தே ஆட்சிபீடம் ஏறினார். இன்று அதே திருடர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றார்.
ரணிலுக்கு அன்று திருடர்களாகத் தெரிந்த ராஜபக்ஷக்கள், இன்று நல்லவர்களாகத் தெரிகின்றனர். ஆகவே, இந்தத் திருட்டுக் கும்பலுக்குத் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்றுள்ளார். இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் இன்று மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
இந்த நாடு வங்குரோத்து அடையக் காரணமாக இருந்தவர்களில் ரணிலும் ஒருவராவார். தற்போது இவர் மீதும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவர் இத்தகைய திருட்டுக் கூட்டங்களுடன் ஒன்றுசேர்ந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் நீதித்துறையும் விசாரணை அமைப்புகளும் முற்றிலும் சுயாதீனமாக இயங்கி வருகின்றன. பதவியில் சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என தெரிவித்தார்.



























