Sep 8, 2026 - 02:08 PM

செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) தொழில்நுட்பத்தின் ஊடாக வீடியோ வழியில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
160 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், நிரந்தர குறுஞ்செய்தி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் வரை பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றிச் செவிப்புலன் வலுவிழந்த நபர்கள் தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
011-2809980 என்ற தொலைபேசி இலக்கத்தை உங்களது கைபேசியில் சேமித்து (Save) கொள்ளவும்.
வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அந்த இலக்கத்திற்கு குரல் அழைப்பு (Audio Call) ஒன்றை மேற்கொள்ளவும்.
அப்போது அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு, உங்களது தொலைபேசிக்கு ஒரு விசேட இணைப்பு (Link) கிடைக்கும்.
அந்த இணைப்பின் (Link) ஊடாக மீண்டும் நுழையவும்.
அதில் தோன்றும் "Join Browser" என்பதை க்ளிக் (click) செய்து, பின்னர் "Join Meeting" என்பதற்குச் செல்லவும்.
இச்செயற்பாட்டின் பின்னர் நீங்கள் ஒரு வீடியோ அழைப்பில் (Video Call) இணைக்கப்படுவதுடன், அதன் மூலம் இலகுவாக முறைப்பாட்டைச் சமர்ப்பிக்க முடியும்.
செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காகவே இந்த விசேட சேவை நிறுவப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



























