Sep 11, 2026 - 05:57 AM

ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் துறைமுக நகரமான மோகாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், செங்கடல் கடலோரப் பகுதி வழியாக முக்கிய மூலோபாயத் தீவுகளை நோக்கி முன்னேறி உள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய சில மணி நேரங்களிலேயே இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றும், செங்கடலின் தெற்குப் நுழைவாயிலுமான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணை மீது ஹூதிகள் மேலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாகவும், ஹனிஷ் (Hanish) தீவுகளை அவர்கள் அடைந்துள்ளதாகவும் ஏமன் அரசாங்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள இந்த நீர்வழிப் பாதையை ஹூதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், அது அமெரிக்காவுடனான போரில் அவர்களின் ஆதரவாளரான ஈரானுக்குப் பெரும் சாதகமாக அமையும்.
மேலும், இரண்டாவது முக்கியப் போக்குவரத்துப் பாதை வழியிலான விநியோகத்தைக் குறைத்து, கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்யும்.
நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, தனது குடியரசுக் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளைப் பாதித்துள்ள ஒரு போரிலிருந்து ட்ரம்ப் வெளியேறுவதையும் இது கடினமாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி கப்பல்களைத் தவிர மற்ற அனைத்துக் கப்பல் நிறுவனங்களுக்கும் செங்கடல் வழியிலான கடல்சார் பயணம் பாதுகாப்பானது என்று ஏமனின் ஹூதி அமைப்பால் நடத்தப்படும் மனிதநேய நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மையம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, உலகளாவிய எண்ணெய்யின் ஐந்திலொரு பங்கு கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மோதல் முடக்கியதிலிருந்து செங்கடல் பாதையையே அது பெரிதும் நம்பியுள்ளது.
ஏமன் அரசாங்கப் படைகளும் அவர்களின் பங்காளர்களும் செங்கடல் கடலோரப் பகுதியில் தெற்கு நோக்கியுள்ள துபாப் (Dhubab) பகுதிக்கு இடம் பெயர்ந்து வருவதாக ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது.





























