Sep 10, 2026 - 10:08 PM

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்காக விசேட திட்டமொன்றை பொலிஸ் மா அதிபர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் பலனாக, சில நாட்களுக்கு முன்னர் தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்ததொன்றில் பங்கேற்ற 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்திலும் இவ்வாறான இடங்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களைப் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் விழும் அபாயம் உள்ளதால், இவ்வாறான விருந்துகள் குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறான விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அவை வலையமைப்புச் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வியாபாரங்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தமது பிள்ளைகளின் உரையாடல்கள், நடத்தைகள் மற்றும் பயணங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துக் கவனம் செலுத்துமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, போதைப்பொருள் பேரழிவு காரணமாக 2025 ஆம் ஆண்டில் 175 நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், அவர்களில் 172 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டில் இதுவரை போதைப்பொருள் தொடர்பில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





























