Sep 11, 2026 - 05:40 PM

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து வெளியேற எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
குறித்த தெரிவுக்குழுவின் கால எல்லையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இத்தெரிவுக்குழுவிற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் அதன் கால எல்லை டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இதற்குத் தனது எதிர்ப்பை வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, இத்தெரிவுக்குழு கூடி தற்போது 9 மாதங்கள் கடந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பான விடயங்களை ஆராய்வதே இத்தெரிவுக்குழுவின் நோக்கமே தவிர, தேர்தலைப் பிற்போடுவது அல்ல என்பதால், எதிர்க்கட்சி என்ற ரீதியில் இனிவரும் நாட்களில் இத்தெரிவுக்குழுவில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
"இத்தெரிவுக்குழு கூடத் தொடங்கி தற்போது 9 மாதங்கள் ஆகின்றன. இதன் செயற்பாடுகளைப் பார்க்கும்போது இது காலத்தைக் கடத்தும் ஒரு முயற்சியாகவே எமக்குத் தோன்றுகிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அல்லாமல், அதனைப் பிற்போடுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள ஒரு தெரிவுக்குழு என்றே இதனை வரையறுக்க முடியும். தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் யோசனை ஒன்றை முன்வைத்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற ரீதியில் நாம் அதற்கு எமது விருப்பத்தைத் தெரிவித்தோம். எனவே, இவ்வாறான காலத்தைக் கடத்தும் தெரிவுக்குழுவிற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் இனிமேல் வரமாட்டோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம்." என்றார்.





























