Sep 16, 2026 - 10:21 AM

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், இது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கு என நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த வழக்கின் விசாரணையை இறுதித் தடவையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.





























