Sep 16, 2026 - 06:49 PM

சவூதி அரேபியாவின் துறைமுக நகரமான யான்புவில் அமைந்துள்ள எண்ணெய் மையங்கள் மற்றும் கமீஸ் முஷைத் விமானப் படைத்தளம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வாரத்தில் ஹூதிகளின் நிலைகள் மீது சவூதி அரேபியா நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அக்குழு கூறியுள்ளது.
முதலாவது தாக்குதல், பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் யான்புவில் உள்ள அராம்கோ (Aramco) மையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டது.
இத்தாக்குதல்கள் மிகவும் துல்லியமாகவும் நேரடியாகவும் அமைந்ததுடன், பெருந்தீயையும் பரவலான அழிவையும் ஏற்படுத்தின என ஹூதிகளின் இராணுவப் படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது தாக்குதல், கமீஸ் முஷைத் விமானப் படைத்தளத்தைக் குறிவைத்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டது.
அத்தாக்குதல்களும் துல்லியமாக அமைந்துள்ளதாகவும் ஹூதிகளின் இராணுவப் படை குறிப்பிட்டுள்ளது.





























