Sep 17, 2026 - 03:17 PM

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நிப்பாட் நகர பஞ்சாயத்து பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும், தெரு நாய்கள் துரத்தி வருவதாகவும், சமீபத்தில் பலர் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவான யுவசேனா-வின் மாவட்டத் தலைவர் விக்ரம் ராதாவே தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பஞ்சாயத்து அலுவலக அதிகாரி திரஜ் பம்ரே வின் அலுவலகத்திற்கு வந்த போராட்டக்காரர்கள், பையில் கொண்டு வந்த நாய்க்குட்டிகளை அங்கு விட்டனர்.
மேலும், ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையையும் அதிகாரியின் மேஜை மீது வைத்தனர். பின்னர் அலுவலக ஊழியர்கள் வந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.





























