Sep 19, 2026 - 11:14 PM

38 வருட பெருமைமிக்க பொலிஸ் சேவையின் பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹணவின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் சிறப்பு சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற இந்நிகழ்வில் அஜித் ரோஹணவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
1966 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி பிறந்த அஜித் ரோஹண, கனம்பெல்ல ஜூனியர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார்.
பின்னர் 1988 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி உதவிப் பொலிஸ் பரிசோதகராக (SI) இலங்கை பொலிஸ் சேவையில் நேரடியாக இணைந்த அவர், தனது முதல் நியமனமாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் கடமைகளை ஆரம்பித்தார்.
பின்னர் லுணுகம்வெஹெர மற்றும் வதுரம்ப ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய அவர், அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் வலஸ்முல்ல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய காலத்தில் பொலிஸ் பரிசோதகர் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டார்.
1999 ஆம் ஆண்டில் உதவி பொலிஸ் அத்தியாட்சகர் தர உயர்வுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அவர், 2005 ஆம் ஆண்டில் சூடானிலும் 2010 ஆம் ஆண்டில் ஹைட்டியிலும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் பணியாற்றினார்.
2007 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியாட்சகராக தரம் உயர்த்தப்பட்டு, பொலிஸ் தலைமையகப் பரீட்சைப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய அதேவேளை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தைப் பெற்று, சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
2012 ஆம் ஆண்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகராகவும் (SSP), 2016 ஆம் ஆண்டில் பிரதி பொலிஸ் மா அதிபராகவும் (DIG) தரம் உயர்த்தப்பட்ட அஜித் ரோஹண, 2021 ஜூன் 30 ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (Senior DIG) தரம் உயர்த்தப்பட்டார்.
தனது நீண்ட சேவைக்காலத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி உட்பட பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ள அவர், பொலிஸ் சேவையின் போது வழங்கப்படும் பல விருதுகள், பதக்கங்கள், பொலிஸ் மா அதிபரின் விசேட பாராட்டுக்கள் மற்றும் சம்பள உயர்வுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





























