Mar 31, 2026 - 08:02 AM -
0
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்களது எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றுக்கும் அதிகமான அளவில் தானாக முன்வந்து குறைத்துக் கொண்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
வலுசக்தி நெருக்கடி காரணமாக நாட்டு மக்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பொதுவான உடன்பாட்டிற்கு வந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தீர்மானத்திற்கு இணையாக, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் தங்களது எரிபொருள் ஒதுக்கீட்டை கணிசமான அளவு குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உலகளாவிய வலுசக்தி நெருக்கடி மற்றும் நிலவும் வறட்சியான வானிலைக்கு மத்தியில் நீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கு அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் பொறுப்புடன் பங்களிக்க வேண்டுமென அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
"வலுசக்தி மற்றும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு அனைத்து அரச நிறுவனங்களும் உள்ளூராட்சி நிறுவனங்களும் விசேட வேலைத்திட்டங்களைத் தயாரிப்பது அவசியமாகும். நிறுவனங்களில் அவசியமற்ற மின்விளக்குகளை அணைத்தல், மின்தூக்கிகளின் (Lifts) பயன்பாட்டை முடிந்தவரை குறைத்தல், அதிக செலவு ஏற்படும் விளம்பரப் பலகைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இரவு 9.00 மணிக்குப் பிறகு அவற்றை அணைத்து வைத்திருப்பது அவசியமாகும். இந்த நாட்டின் அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பிரஜைகளுக்கும் இந்த நடவடிக்கையில் பங்களிக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்; இதற்காக உங்களுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
