Apr 1, 2026 - 12:57 PM -
0
இலங்கையின் நீதித் துறையை நவீனமயப்படுத்துவதற்கும், நிறுவன ரீதியான வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு முக்கிய மைல்கல்லாக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, புதிய முகாமைத்துவ தகவல் கட்டமைப்பு (Management Information System - MIS) மற்றும் நவீனமயமாக்கப்பட்ட இணையத்தளத்தை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியுடன், நீதி அமைச்சின் பங்களிப்புடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), யுனிசெப் ஸ்ரீ லங்கா (UNICEF Sri Lanka) ஆகியவற்றினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘நீதித் துறைக்கான ஆதரவுத் திட்டத்தின்’ (Support to Justice Sector Project - JURE) ஒரு முயற்சியாக இந்த MIS கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீதித் துறையினுள் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவது தொடர்பான பரந்த ஆதரவின் ஒரு அங்கமாக, JURE திட்டத்தின் உதவியுடன் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள மேம்பாட்டை கூடுதலாக வலுப்படுத்துகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொகுதியானது, சத்தியப்பிரமாணத்திற்கான ஆணையாளர்கள், திடீர் மரண விசாரணை அதிகாரிகள், சமாதான நீதவான்கள், உத்தியோகபூர்வமற்ற நீதவான்கள் மற்றும் சத்தியப்பிரமாண மொழி பெயர்ப்பாளர்கள் போன்ற நீதித் துறையின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை நெறிப்படுத்தவும் தொழில்முறைப்படுத்தவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முறையான கட்டமைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தெரிவுக்கான அளவுகோல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த MIS கட்டமைப்பானது, நியமனங்களின் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை அதிகரிப்பதுடன், நிர்வாகம் தொடர்பிலான தாமதங்கள் மற்றும் முரண்பாடுகளை குறைக்கிறது.
இந்தக் தொகுதியானது நீதி அமைச்சினுள் தரவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதுடன், திறனான ஆவணப் பராமரிப்பு, மேம்படுத்தப்பட்ட தகவல் பகிர்வு மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான சிறந்த ஒருங்கிணைப்பை சாத்தியமாக்குகிறது. இந்தத் தரவு சார்ந்த அணுகுமுறையானது, தகவலறிந்த முடிவுகளை எடுப்பதை ஆதரிப்பதோடு, மிகவும் துரிதமான மற்றும் பயனுள்ள சேவையை பொதுமக்களுக்கு வழங்க உதவுகிறது.
மீளமைக்கப்பட்ட இணையத் தளமானது ஒரு விரிவான ‘குடிமக்கள் சேவை தகவல் விநியோக கட்டமைப்பு’ (Citizen Services Information Portal) முறையை அறிமுகப்படுத்துகிறது. இது அத்தியாவசிய நீதிச் சேவைகள் குறித்த தெளிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குகிறது. இந்த கட்டமைப்பு மூலம் பயனர்கள் சட்ட உதவி, மத்தியஸ்தம், நடுவர் மன்றம், கடன் இணக்கப்பாடு, பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு சேவைகள் தொடர்பான வளங்களை எளிதாக பெறவும் கண்டறியயும் முடியும்.
இது மாத்திரமன்றி, இந்த இணையத்தளத்தில் JURE திட்டத்தின் முக்கிய தகவல் பரப்பல் முயற்சியான ‘Know Your Neethi’ (உங்கள் சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்) எனும் சட்டம் தொடர்பான கற்றல் அடங்கிய வீடியோ தொடர்கள் கொண்ட பிரத்தியேக இணையப் பக்கம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிக்கலான சட்ட எண்ணக்கருக்களை பொதுமக்களுக்கு எளிமைப்படுத்தி வழங்குவதன் மூலம், சட்டத்தின் கீழ் தங்களுக்குள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளை பிரஜைகள் புரிந்துகொள்வதற்கான அறிவை இது வழங்குகிறது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியம், UNDP ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஆளுமையை வலுப்படுத்துவதிலும் நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் மாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இலங்கையில் மிகவும் வெளிப்படையான, பொறுப்புக்கூறத்தக்க மற்றும் மக்களை மையமாக கொண்ட நீதிக்கான கட்டமைப்புத் தொகுதியை கட்டியெழுப்புவதில், MIS தொகுதி மற்றும் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் ஆகியன ஒரு முக்கியமான படி என்றும் அவர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.
