Apr 7, 2026 - 10:59 AM -
0
இலங்கை மக்கள் டிஜிட்டல் உலகத்தை பாதுகாப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் கையாள்வதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் வளங்களை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற முயற்சியான FOUNDATION.LK, தனது புதிய திட்டமான “DiGiSavi” ஐ 2026 மார்ச் 24 அன்று இலங்கை அறக்கட்டளை நிறுவன (SLFI) கேட்போர் கூடத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. பெருகிவரும் டிஜிட்டல் சமூகத்தில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் அதேவேளையில், பொறுப்புள்ள டிஜிட்டல் பிரஜைகளை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு, இலங்கையின் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் வலுவூட்டல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இத்திட்டத்தை நனவாக்க பாடுபட்ட முக்கிய பங்குதாரர்கள், பங்காளிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இதில் ஒன்றிணைந்தனர்.
DiGiSavi என்பது FOUNDATION.LK இனால் முன்னெடுக்கப்படும் ஒரு நாடு தழுவிய திட்டமாகும். இது டிஜிட்டல் திறன் மேம்பாடு, சேவைகளுக்கான அணுகல், இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் சமூகங்களை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. FOUNDATION.LK இனால் அங்கீகரிக்கப்பட்ட 50 DiGiSavi மையங்களின் வளர்ந்து வரும் வலையமைப்பின் மூலம், குறிப்பாக அடிமட்ட அளவில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதையும், நாடு முழுவதும் டிஜிட்டல் வாய்ப்புகள் சமமாக கிடைப்பதை உறுதி செய்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய LK டொமைன் பதிவகத்தின் (LK Domain Registry) டொமைன் ரெஜிஸ்ட்ரார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்கள், இத்திட்டத்தின் தோற்றம் மற்றும் LK டொமைன் பதிவகத்தின் கீழ் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து விவரித்தார். நிகழ்வில் உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு. வருண ஸ்ரீ தனபால அவர்கள், இத்திட்டத்தின் காலோசித முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தவும் இலங்கை சமூகங்களை வலுவூட்டவும் இத்திட்டத்திற்கு உள்ள ஆற்றலைச் சுட்டிக்காட்டினார்.
திட்ட மேலாளர்(Project Manager) கயானி பெரேரா அவர்கள் DiGiSavi திட்டத்தின் குறிக்கோள்கள், செயல்படுத்தும் முறை மற்றும் நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் இது ஏற்படுத்த எதிர்பார்க்கும் தாக்கம் குறித்த விரிவான விளக்கத்தை வழங்கினார். நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாக, அங்கு சமூகமளித்திருந்த அனைத்து DiGiSavi மையங்களும் கௌரவிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றுக்கும் அங்கீகாரச் சான்றிதழ்கள் மற்றும் அதிகாரப்பூர்வ DiGiSavi வர்த்தக முத்திரை (branding) பொருட்கள் வழங்கப்பட்டன. சமூக மட்டத்தில் டிஜிட்டல் வலுவூட்டலை வழங்குவதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தயார்நிலையை இந்த நடவடிக்கை அங்கீகரித்தது.
இறுதியாக, FOUNDATION.LK இன் தலைமை நிர்வாக அதிகாரி நிரோஜா ஜயவிக்ரம அவர்கள், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த பங்கேற்பாளர்கள், பங்காளிகள் மற்றும் DiGiSavi மையப் பிரதிநிதிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். இத்திட்டத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையைப் பாராட்டிய அவர், இது டிஜிட்டல் உள்ளடக்கம் (digital inclusion) நோக்கிய ஒரு மாற்றத்தக்க பயணத்தின் தொடக்கம் என்பதை வலியுறுத்தினார்.
அறிமுக நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, DiGiSavi மையங்கள் ஊடாக இலங்கை முழுவதும் ஒரு மில்லியன் (1 Million) பயனாளர்களை சென்றடைவதற்கான DiGiSavi இன் லட்சிய இலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த துணிச்சலான இலக்கானது, டிஜிட்டல் மாற்றமானது அனைத்துப் பிராந்தியங்களிலும் உள்ள சமூகங்களுக்கு உள்ளடக்கியதாகவும், அணுகக்கூடியதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. தகவல்கள், தொடர்புகள் மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்கான தளத்தை வழங்கும் வகையில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.digisavi.lk உம் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது. DiGiSavi தனது பயணத்தைத் தொடங்கும்போது, அது மிகவும் இணைக்கப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒரு முக்கிய அடியாகக் கருதப்படுகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் நாட்டின் பிற மையங்களையும் எமது வலையமைப்பில் இணைந்து DiGiSavi பயணத்தின் ஒரு பகுதியாக இருக்குமாறு அழைக்கிறோம்.
