May 5, 2026 - 01:30 PM -
0
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்க எதிர்பார்க்கப்படுவதாக துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக, மொத்த நஷ்டஈட்டுத் தொகையில் 50 சதவீதத்தை திறைசேரி நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தற்போது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் அதற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதன்படி, இந்த மாதம் 15ஆம் திகதியளவில் முதற்கட்ட 50 சதவீத நஷ்டஈட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எஞ்சிய 50 சதவீதத்தை குறுகிய காலத்திற்குள் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் அனுர கருணாதிலக்க:
''இதில் 50 சதவீதப் பகுதியை திறைசேரி நிதியிலிருந்து வழங்க எதிர்பார்க்கிறோம். அதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரமளவில் அமைச்சரவை அனுமதி கிடைக்கும் என நான் நம்புகிறேன். அதற்கமைய, இந்த மாதம் 15ஆம் திகதியளவில் ஓய்வுபெற்றவர்களுக்கு முதற்கட்ட 50 சதவீதத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், எஞ்சிய 50 சதவீதத்தை குறுகிய காலத்திற்குள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன'' எனக் குறிப்பிட்டார்.
