May 5, 2026 - 05:13 PM -
0
அரசாங்கம் நீதிமன்றத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளும் கருத்தக்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மே தினப் பேரணியின் போது ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை அவர் மீளப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ள தீர்ப்பொன்றைத் தொடர்ந்து கைதட்டத் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி வௌியிட்ட கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தியே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்தானது சுதந்திரமான நீதித்துறைச் செயல்முறைக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீதிமன்றத்தின் சுதந்திரத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சொல்லிலும் செயலிலும் மதிக்க வேண்டும்.
குறித்த கருத்தானது நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் விருப்பத்திற்கு அடிபணியச் செய்யும் முயற்சியாகவே தாம் கருதுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு முன்கூட்டியே தெரியும் என்பதையே அவரது கருத்தை உணர்த்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதி வழங்கப்படுவது மட்டுமன்றி, அது வழங்கப்படுவது தெளிவாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் புலப்பட வேண்டும் என்பது எமது அரசியலமைப்பு முறையின் அடிப்படைத் தத்துவமாகும்.
நீதிமன்றமானது அரசியலமைப்புக்கே பொறுப்புக்கூற வேண்டுமே தவிர நிறைவேற்று அதிகாரத்திற்கு அல்ல என்றும், இலங்கையின் நீதிமன்றங்களுக்கு ஜனாதிபதி, அமைச்சர் அல்லது எந்தவொரு அரசியல் கூட்டணியின் விருப்பத்தின் பேரிலும் அதிகாரம் வழங்கப்படுவதில்லை, மாறாக மக்களிடமிருந்தும் அரசியலமைப்பிலிருந்தும் அதிகாரம் கிடைக்கிறது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நாட்டு மக்கள் இன்னும் மதிப்பளிக்கும் சில நிறுவனங்களில் ஒன்றாக நீதிமன்றம் விளங்குகின்றது.
இவ்வாறான கருத்துக்களில் இருந்து நீதிமன்றத்தைப் பாதுகாப்பதற்காக ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் தாம் அதிகபட்சமாக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக எதிர்க்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
