May 5, 2026 - 05:22 PM -
0
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விஜய் முதலமைச்சராக ஆதரவு அளித்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும் விஜய் ஆட்சியை அமைக்க கவர்னரிடம் உரிமை கோர இருக்கிறார்.
கவர்னரும் அதற்கு அனுமதி அளிப்பார். அதனால் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு சட்டசபையில் குறிப்பிட்ட தினங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
த.வெ.க. பெரும்பான்மைக்கு கூடுதலாக 10 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஆகியோர் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
தமிழக கவர்னர் ஆர்.வி. அர்லேகரை சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் தரப்பில் ஏற்கெனவே நேரம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோர உள்ளார். இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கவர்னருக்கு த.வெ.க. கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை மறுநாள் (7) த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பதவியேற்பு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
