May 5, 2026 - 06:01 PM -
0
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் நால்வரும் நேற்று (04) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டனர்.
முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி காமினி விஜேசிங்க, முன்னாள் பிரதிக் கணக்காய்வாளர் தலைமையதிபதி ஜீ.தேவஞானன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் அரசாங்க சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ரத்ன தேசப்பிரிய ஆகியோர் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இவ்வாறு இரகசியத் தன்மையைப் பேணுவதற்கான சத்தியத்தியம் செய்துகொண்டனர்.
2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய அல்லது பாராளுமன்றம் உத்தரவிடும் சந்தர்ப்பத்தில் அல்லது 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் (09) (அ) ஆம் பிரிவு ஆகிய எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலே தவிர, கணக்காய்வு தொடர்பான தகவல்களை அரசாங்க அல்லது தனியார் துறையில் உள்ள எந்தவொரு நபருக்கும், எந்தவொரு முறையிலும் வெளிப்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை அல்லது வெளிப்படுத்தல்களை மேற்கொள்ள மாட்டோம் என இரகசிய தன்மையைப் பேணுவதற்கான சத்தியம் செய்யப்பட்டது.
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும், கணக்காய்வு தலைமையதிபதியுமான சமுதிகா ஜயரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும் இதன்போது இணைந்துகொண்டனர்.
