May 6, 2026 - 12:20 PM -
0
தமிழகத்தின் முதலமைச்சராக நாளை (07) தவெக தலைவர் விஜய் பதவி ஏற்கிறார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கட்சியின் வெற்றிக்கான கதாநாயகனாக எப்போதுமே அக்கட்சி வெளியிடும் தேர்தல் அறிக்கைதான் இருக்கும். அந்த வகையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த தேர்தல் அறிக்கையும் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும், அந்த தேர்தல் அறிக்கையில் எந்த அறிவிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவருடைய முதல் கையெழுத்து இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சராக விஜய் ஆட்சி பொறுப்பேற்றதும் 2 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பெண்கள் குறிப்பிட்ட பேருந்திற்காக காத்திருக்கும் நிலை மாறும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது. தற்போது வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
