May 21, 2026 - 12:19 PM -
0
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்ட டபிள்யூ. எஸ். சத்தியானந்த என்பவரின் சேவை தமக்குத் தேவையில்லை எனக் கூறி, அவரை அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதன் மூலம், குறித்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அந்த அதிகாரியின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குறித்த மேலதிக செயலாளர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்ததன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, நீதியரசர்கள் சோபித ராஜகருணா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரின் உடன்பாட்டுடன் இந்தத் தீர்ப்பை (19) அறிவித்தார்.
30 வருட அரச நிர்வாக சேவை அனுபவம் கொண்ட தான், அரச நிர்வாக அமைச்சினால் கடந்த 2024 டிசம்பர் 18 அன்று போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், அன்றைய தினமே கடமைகளைப் பொறுப்பேற்றதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். எனினும், அன்றைய தினம் நண்பகல் 12.30 மணியளவில் தனது அறைக்கு வந்த அமைச்சின் செயலாளர், தனது சேவை தேவையில்லை எனக் கூறி தன்னை அலுவலகத்தை விட்டு வெளியேறப் பணித்ததாகவும், இந்த நடவடிக்கை ஒரு உயர் அதிகாரிக்கே உரித்தற்ற வகையில் அமைந்திருந்ததால் தான் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது தீர்ப்பை வாசித்த நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, 2022 டிசம்பர் 14 அன்று வெளியிடப்பட்ட 2310/29 இலக்க அதிவிசேட வர்த்தமானியின்படி, மேலதிக செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் அரச சேவை ஆணைக்குழுவுக்கே உரியது என்று சுட்டிக்காட்டினார். சட்டப்பூர்வமான அரச அதிகாரியின் முடிவுகளில் தலையிடுவது அல்லது அழுத்தம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அரச சேவை ஆணைக்குழுவின் அதிகாரத்தில் தலையிட்டதன் மூலம் செயலாளர் சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டது.
அரச அதிகாரிகள் மக்களின் பாதுகாவலர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அமைச்சின் செயலாளருக்கு மேற்பார்வை அதிகாரங்கள் இருந்தாலும், அரச அதிகாரிகளை நியமிப்பதில் அல்லது இடமாற்றம் செய்வதில் அரச சேவை ஆணைக்குழுவின் அதிகாரங்களில் தலையிடுவது அல்லது அந்த அதிகாரங்களை தம்வசப்படுத்த முயல்வது தீவிரமான விடயம் என்றும் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, மனுதாரரின் கௌரவத்தை மீறியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படும் உரிமையை அமைச்சின் செயலாளர் மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எவ்வாறாயினும், மனுதாரருக்கு ஏற்பட்ட அவமதிப்பை ஈடுசெய்ய முடியாது என்பதால், நட்டஈடு அல்லது வழக்குச் செலவுகள் குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

