May 28, 2026 - 04:16 PM -
0
நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாக இருந்த 8 குற்றவாளிகள் நேற்று (27) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர்,
கடந்த 22ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 19 சந்தேகநபர்கள் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்கள் உட்பட 21 பேர் அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் தற்போது விசேட பிரிவுகளின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அதேபோல், நேற்று முன்தினம் இரவு, அதாவது 27ஆம் திகதி மேலும் 8 சந்தேகநபர்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டுக்கு அழைத்து வர நமக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இந்த 8 சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா பகுதிகளில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களாவர்.
புலனாய்வு பிரிவு நடவடிக்கையின் மூலமாக இந்த 8 பேரையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சந்தேகநபர்களில் மூவர், திட்டமிட்ட குற்ற கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, அங்கிருந்தவாறே இலங்கையில் சில குற்றச் செயல்களை இயக்கிய குழுவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் இருவர் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களாவர். ஏனைய மூவரும் இந்த நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என நாம் அடையாளம் கண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் குற்றங்களைச் செய்துவிட்டு, பல்வேறு நாடுகளுக்குச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து கொண்டு, குற்றச் செயல்களை இயக்கும் எவருக்கும் நாங்கள் இடமளிக்கப் போவதில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
2024, 2025 மற்றும் 2026 ஆகிய இந்த மூன்று வருடங்களிலும் சிவப்பு எச்சரிக்கை மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 32 சந்தேகநபர்கள், அதேபோன்று பல்வேறு நாடுகளுடன் தொடர்புகொண்டு தற்போது பல்வேறு குற்றங்களைச் செய்து வரும் மேலும் 70 சந்தேகநபர்களை நாம் இதுவரையில் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளோம்.
அத்துடன், மேலும் 89 சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்பில் நாம் மிகத் தெளிவாகத் தயாராக இருக்கிறோம் என்பதையும் நினைவூட்ட வேண்டும்.
பல்வேறு நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, எஞ்சியுள்ள சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள 89 சந்தேகநபர்களையும் நாம் இலங்கைக்கு அழைத்து வருவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

