Aug 13, 2026 - 01:48 PM

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் இளைஞர்களிடையே பேரிடர் ஆயத்தநிலை மற்றும் அவசரக்கால பதிலளிப்புத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் ‘The Resilience Lab: அவசரநிலைகளுக்கான பதிலளிப்பில் உள்ளூர் இளைஞர்களின் நடவடிக்கை’ என்ற தேசிய அளவிலான மாதிரிப் பயிற்சி நிகழ்ச்சி இன்று (12) மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
‘வெவ்வேறான சூழல்கள், பகிரப்பட்ட அபிலாஷைகள்’ (Different Contexts, Shared Aspirations) என்ற சர்வதேச இளைஞர் தினக் கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடு முழுவதிலும் உள்ள இளைஞர் கழக வலையமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி 100 இளம் தலைவர்கள் பங்கேற்றனர். பேரிடர் ஏற்பட்ட பின்னர் நிவாரணம் வழங்குவதோடு நின்றுவிடாமல், பேரிடருக்கு முந்தைய ஆயத்தநிலை, முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளைப் பரப்புதல் மற்றும் சமூக மீள்திறனை உருவாக்குதல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
2.2 மில்லியன் மக்களைப் பாதித்து, 600க்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பறித்து, சுமார் 115,000 வீடுகளைச் சேதப்படுத்திய 'டித்வா' (Ditwah) சூறாவளி போன்ற கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதில் பங்கேற்பாளர்களுக்குச் செய்முறைப் பயிற்சிகள் (tabletop simulations) அளிக்கப்பட்டன. வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, டெங்கு நோய்த்தொற்று மற்றும் அதிக வெப்ப அழுத்தம் போன்ற அவசரநிலைகளை மாதிரிப் பயிற்சிகளாகக் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய 'இறுதி நபரையும்' முன்கூட்டிய எச்சரிக்கைகள் சென்றடைவதை உறுதிசெய்தல் மற்றும் பாலின மற்றும் பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் (SRHR) விடயங்களை அவசரகாலப் பதிலளிப்பில் ஒருங்கிணைத்தல் குறித்து இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC), இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRC) மற்றும் இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் (FPASL) ஆகிய நிறுவனங்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்கின.
முக்கிய புள்ளிவிவரங்கள்
● 4.78 மில்லியன் இளைஞர் சக்தி: 2024ஆம் ஆண்டின் சனத்தொகைத் தரவுகளின்படி, 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 22% (ஒவ்வொரு 5 நபர்களிலும் ஒருவர்) ஆவர்.
● 14,000க்கும் அதிகமான இளைஞர் கழகங்கள்: நாடு முழுவதும் பரந்துள்ள இந்த வலையமைப்பின் மூலம் சுமார் 280,000 இளைஞர்களைச் சமூக சேவை நடவடிக்கைகளில் நேரடியாக ஒருங்கிணைக்க முடியும்.
● 'டித்வா' சூறாவளியின் தாக்கம்: 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 233,000 பேர் இடம்பெயர்ந்ததுடன் 115,000 வீடுகள் சேதமடைந்தன.
சிறப்புரைகள்
தலைவர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (NYSC):
"நாம் எதைக் கட்டியெழுப்ப முற்படுகிறோம் என்பது குறித்து ஒரு தெளிவான தொலைநோக்கு நமக்கு இருக்க வேண்டும். டித்வா சூறாவளியானது இலங்கை எதிர்நோக்கிய மிகக் கடுமையான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும்; இது பெருந்திரளான மக்களை இடம்பெயரச் செய்து, கடுமையாகப் பாதித்தது. இந்தப் பேரழிவின் சுவடுகளைத் தொடர்ந்து, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மிக விரைவாக தலையிட வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டது. ஏனெனில், இதுபோன்றதொரு பேரழிவு நிகழும்போது, தங்களது நேரத்தையும், நெகிழ்வுத்தன்மையையும், திறன்களையும், ஆற்றலையும், அர்ப்பணிப்பையும் வழங்கிச் சுறுசுறுப்பாகப் பங்களிப்பு செய்யக்கூடிய வலுவான இளைஞர் வலையமைப்பைக் கொண்டது தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டுமேயாகும். எனவே, ஒரு பேரிடர் நிகழ்ந்த பின்னர் வெறும் நிவாரணம் வழங்குபவர்களாகச் செயற்படாமல், முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் பரப்புவதற்கும், சமூகங்களை ஒருங்கிணைப்பதற்கும், உயிர்களைப் பாதுகாப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கூடிய சுறுசுறுப்பான இளம் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்."
டாக்டர் தயாநாத் ரணதுங்க, உதவிப் பிரதிநிதி, UNFPA இலங்கை:
"இளைஞர்கள் வெறும் பேரிடர் நிவாரணத்தைப் பெறுபவர்கள் மட்டுமல்ல; அவர்கள் தகவல் தொடர்பாளர்கள், சமூக அமைப்பாளர்கள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்கள் ஆவர். ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் வெற்றியானது, இணைய வசதி இல்லாத, தனிமையில் வாழும் முதியவர் அல்லது கர்ப்பிணித் தாய் உள்ளிட்ட கடைசி நபரை அது எவ்வாறு சென்றடைகிறது என்பதில் தான் உள்ளது. எமது இளைஞர் வலையமைப்பிற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவையும் பாலின சமத்துவப் புரிதலையும் வழங்குவதன் மூலம், அவர்களின் ஆற்றலை உயிர்களைப் பாதுகாக்கும் தேசிய சக்தியாக மாற்ற முடியும்."





















