Aug 13, 2026 - 02:16 PM

செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த உற்பத்தித் துறையில் பெரும் தொலை நோக்கு கொண்ட பொறியியல் துறை தொழில்நுட்ப நிறுவனமான ISF, உலகின் முதன்முதல் முழுமையான, தானியங்கி (fully Automated ) முறையில் தேங்காயிலிருந்து இளநீரை பெறும் தொழில்நுட்பத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் தேங்காய் பதப்படுத்தும் துறையில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன், மனித உழைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, செயல்பாட்டுத் திறமையின்மையைக் களைந்து, முதலீட்டிற்கான வருமானத்தையும் அதிகரிக்கிறது.
உள்ளூர் பொறியியலாளர்களால் இலங்கையிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், பாரம்பரியமாக மனித உழைப்பைச் சார்ந்திருந்த ஒரு செயல்முறையைத் தன்னியக்கமயமாக்குகிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கௌரவ பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, ISF-இன் முக்கிய சர்வதேச சந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரக அதிகாரிகள், துறைசார் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற நேரடி செயல்விளக்கத்தின் மூலம் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், இந்தத் தொழில்நுட்பம் செயல்படுவதை நேரில் காணவும், தேங்காய் பதப்படுத்துவோருக்கு இது வழங்கும் முக்கிய நன்மைகளைப் புரிந்துகொள்ளவும் சிறப்பான வாய்ப்பைப் பெற்றனர்.
இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ISF-இன் பணிப்பாளர் அஞ்சுலா சிவகுமாரன் அவர்கள்: “தேங்காயிலிருந்து இளநீரை பெறும் இந்தத் தானியங்கி அமைப்பை வடிவமைத்து, சோதித்து, அறிமுகப்படுத்தியதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்த நூதனமான கண்டுபிடிப்பைக் கண்டு இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள எமது வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; மேலும், இந்த இயந்திரம் சில வாரங்களில் பிலிப்பைன்ஸிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இயந்திரத்தை நிறுவுவதைக் கண்காணிக்கவும், விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்கவும் எமது பொறியியலாளர்கள் குழு அங்கு செல்லவுள்ளது.
பிராந்திய மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிடும் வகையில், அவற்றின் செயல்பாடுகளைத் தானியக்கமாக்க உதவுவதே எமது இலட்சியமாகும். இலங்கையின் சிறப்பான பொறியியல் திறனைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நோக்கத்தை நனவாக்க நாம் விரும்புகிறோம். இதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் முதலீட்டிற்கான பலனைத் திரும்பப் பெறுவதை உறுதிசெய்து, வாடிக்கையாளர்கள் தங்கள் வணிக இலக்குகளை அடைய நாங்கள் உதவுவோம்.
“ISF-இன் செயல்பாடுகள் தேங்காயிலிருந்து இளநீரை பெறுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, என்று அஞ்சுலா குறிப்பிடுகிறார். “தேங்காயிலிருந்து நார் உரித்தல், தேங்காய் சிரட்டையை நீக்குதல் மற்றும் தோல் சீவுதல் உள்ளிட்ட தேங்காய் பதப்படுத்தும் செயல்முறையின் அனைத்து நிலைகளிலும் நாங்கள் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். பொறியியல் நிபுணத்துவம், தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், வணிக ரீதியான சிக்கலான சவால்களுக்குத் தீர்வு காணும் வகையிலான தொழில்நுட்பங்களை உருவாக்குவதே எமது நோக்கமாகும். விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மூலம் முன்னோடித் தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதோடு, உலகளாவிய பங்காளர்களோடு இணைந்து பணியாற்றுவதிலும் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
1977-இல் நிறுவப்பட்ட ISF, ஒரு இயந்திர உற்பத்தி நிறுவனமாகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று பால் , தேங்காய், உணவு, மருந்து, இரசாயனப்பொருள் மற்றும் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி துறைகளுக்கான தொழில்நுட்பம், பொறியியல், தானியங்கி மற்றும் செயல்முறை சார்ந்த முழுமையான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
“இது ஒரு புதிய உலகம், என்று அஞ்சுலா கூறினார். “மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் அறவிடும் கட்டணத்தில் மிகச் சிறிய ஒரு பகுதியைக் கொண்டே, இலங்கையிலும் இப்பிராந்தியத்திலும் உள்ள நிறுவனங்களை உலகளாவிய தரத்திற்கு உயர்த்த உதவுவதே எமது இலக்காகும்.





















