Aug 14, 2026 - 04:42 PM

வருடாந்தம் நடாத்தப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரா உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
18 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கும்பல் மற்றும் ரந்தோலி பெரஹெரா வீதி உலா
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கும்பல் பெரஹெராவும், 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ரந்தோலி பெரஹெராவும் வீதி உலா செல்லவுள்ளன.
அதற்கமைய, பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியை உள்ளடக்கும் வகையில் பொலிஸாரால் இந்த விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், வீதித் தடைகள் அமைத்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுதல், வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனையிடுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் ஆகிய பல அம்சங்களின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மற்றும் முப்படையினரால் விசேட பாதுகாப்பு
பெரஹெராவின் பாதுகாப்பு கடமைகளுக்காக 6,200 பொலிஸ் அதிகாரிகளுடன் 564 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும், 1,200 முப்படை அதிகாரிகளும், 29 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், இதற்காக பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியைப் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலதா பெரஹெரா நடைபெறும் காலத்தில் கண்டி நகரத்திற்குள் நுழையும் 14 இடங்களை உள்ளடக்கும் வகையில் வீதித் தடைகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
13 வாகன நிறுத்துமிடங்கள்
பெரஹெராவைப் பார்ப்பதற்காக வருகை தரும் மக்களுக்காக வாகனங்களை நிறுத்துவதற்கு 13 வாகன நிறுத்துமிடங்கள் தயார் செய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதன்படி, மக்களின் வசதிக்காக 6 இலகுரக வாகன நிறுத்துமிடங்களும் 7 கனரக வாகன நிறுத்துமிடங்களும் ஒதுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பெரஹெரா காலப்பகுதியில் கண்டி நகரத்தைத் தவிர்த்துப் பயணிப்பதற்காக சாரதிகளுக்கு மாற்று வீதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே குறிப்பிட்ட காலத்தில் அம்மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை மேலதிகமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.























