Aug 15, 2026 - 06:12 AM

இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை (15) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில நடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் நிலையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை அறிவிப்பின் மூலம், கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு விலகி இருக்குமாறு அந்நாட்டின் தேசிய புவியியல் நிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைக்கு நிலநடுக்க ஆபத்தில்லை
இதற்கிடையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தையடுத்து இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க நிலைமையினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.























