Aug 18, 2026 - 09:42 AM



ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமிட்புர சது என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'மோதரை சது' அல்லது 'சமிட்புர சது' குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்களில் ஒருவரான இவர், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட ஒருவராகக் கருதப்படுகிறார்.
அதன்படி, ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

























