Aug 27, 2026 - 01:52 PM





நம்மில் பலரும் நமது நாளை சூடான தேநீருடன்தான் தொடங்குவோம். அதிலும் சில வீடுகளில், இல்லத்தரசிகள் காலையில் டீ-யை அதிகம் வைத்துவிட்டு மீதமுள்ள டீ-யை ஒரு பாத்திரத்தில் வைத்துவிடுவர். பெரும்பாலும் அடுப்பின் மீதே பாத்திரத்தில் வைத்திருப்பர். மதியம் அல்லது மாலையில் மீண்டும் அதை கொதிக்க வைத்து குடிப்பார்கள். அடிக்கடி டீ போட வேண்டாம் என நினைத்து அவர்கள் செய்யும் இந்த சின்ன பழக்கம், உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?
பொதுவாக நாம் சுடச்சுட புதிதாக போடும் டீ-யில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அதுவே, ஆறிப்போன டீ-யில் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் படிப்படியாக அழிந்துவிடும். அதை மீண்டும் கொதிக்க வைத்தாலும், அதன் அசல் நறுமணம் போய்விடும், மேலும் அதன் சுவை முற்றிலும் கசப்பாகவோ மாறிவிடும்.
அப்படியான ஆறிய டீயை மீண்டும் கொதிக்க வைக்கும்போது, அதில் 'டானின்' எனப்படும் பொருளின் அளவு அதிகரிக்கும். அது, வயிற்றுக்குள் நுழைந்தவுடன் குடலின் உள் அடுக்கை எரிச்சலூட்டும். இதனால், திடீரென கடுமையான நெஞ்செரிச்சல், புளிப்பான ஏப்பம் மற்றும் அதிக அமிலத்தன்மை போன்றவை ஏற்படக்கூடும்.
மட்டுமன்றி டீ-யை தொடர்ந்து சூடாக்குவது, வயிற்றின் இயற்கையான செரிமானச் சாறுகளின் சமநிலையைக் குலைக்கும். இதனால், உணவு செரிப்பது கடினமாகும். மேலும், வயிற்றில் தொடர்ச்சியான வாயுத்தொல்லை ஏற்படவும்கூடும். மேலும் இது வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது குமட்டல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
தேநீரை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள அசுத்தங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஆறிய தேநீரில், அசாதாரணமான மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
அதாவது, ஆறிய தேநீரை 3 முதல் 4 மணி நேரத்திற்கு மேல் மூடாமலோ அல்லது ஒரு பாத்திரத்தில் வைத்தோ வைக்கும்போது, அதில் நுண்ணிய பாக்டீரியாக்களும் (கிருமிகளும்) பூஞ்சைகளும் வேகமாக வளரத் தொடங்குகின்றன. பாலும் சர்க்கரையும் இந்த பாக்டீரியாக்கள் மிக விரைவாகப் பரவ உதவுகின்றன. இந்தத் தேநீரை மீண்டும் சூடாக்கிக் குடிப்பதால், வயிற்றில் நேரடியாக பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, உணவு நஞ்சாக மாறக்கூடும்.
எனவே தயாரிக்கும் போதே தேவையான அளவு புதிய தேநீரை மட்டும் தயாரித்துக் கொள்ளுங்கள். எப்போதும் தேநீரைத் தயாரித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குள் அருந்தவும். எந்தச் சூழ்நிலையிலும் மீதமுள்ள ஆறிய தேநீரை மீண்டும் கொதிக்க வைக்கவோ அல்லது மைக்ரோவேவில் சூடாக்கவோ கூடாது.























