Aug 27, 2026 - 02:29 PM





நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 800க்கும் மேற்பட்டோரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த வெள்ளத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 49 பேரும், கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 57 பேரும் நேபாளம் சென்றிருந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலம் மற்றும் வான்வழித் தேடல், மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் 2,000 வீரர்களைக் களமிறக்கியுள்ளது.
மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளான ராசுவா, நுவாகோட் மாவட்டங்களில் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜாராம் பஸ்நெட் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதுவரை வெள்ளத்தில் சிக்கியிருந்த 97 பேரை ராணுவம் மீட்டுள்ளதாக அவர் கூறினார். அவர்களில் மூவர் திரிசூலி ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக நேபாள காவல் துறையும் ஆயுதப் படையும் தங்கள் அதிகாரிகளை களமிறக்கியுள்ளன.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழக பயணிகள் குறித்து விவாதிக்க முதலைமச்சர் விஜய் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்றிருந்த 103 நபர்களைப் பற்றிய தகவல்களை அவர் சட்டப்பேரவையில் கூறினார்.
கும்பகோணத்தில் இருக்கும் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி என்ற நிறுவனம் நேபாளத்தின் சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பயணத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேநேரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் நேபாளத்தில் இன்னமும் காணாமல் போயுள்ளனர் என அவர்களின் பயணத்தை ஏற்பாடு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.























