Aug 27, 2026 - 02:36 PM





நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 177 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பேரழிவில் சிக்கி இதுவரை 900-க்கும் மேற்பட்ட நபர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போனவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 295 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும் அடங்குவர். மேலும் அமெரிக்கா, உக்ரைன், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, மலேசியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதில் மாயமாகியுள்ளனர்.
வெளிநாட்டினர் மட்டுமின்றி, அடையாளம் காணப்படாத 265 நபர்களின் விபரங்களை சேகரிக்கும் பணிகளிலும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சீரற்ற வானிலை காரணமாக பல இடங்களில் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இராணுவம் மற்றும் உள்ளூர் மீட்புப் படைகள் மீட்பு உபகரணங்களுடன் ஈடுபட்டு வருகின்றன.
வெள்ள அபாயம் இன்னும் நீடிப்பதால், ஆற்றோரங்களில் வாழும் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. உயிரிழப்பு மற்றும் காணாமல் போனோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.























