Aug 28, 2026 - 07:22 PM





பாராளுமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றச் செயலகம் அறிவித்துள்ளது.
சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (20) நடைபெற்ற பாராளுமன்றப் அலுவல் குழுக் கூட்டத்தில் குறித்த வாரத்திற்கான பாராளுமன்றப் அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்றப் அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான காலம் வாய்மூல விடை எதிர்பார்க்கும் வினாக்களுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை (203 ஆம் அதிகாரத்தின் கீழ்) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இலக்க 2489/22 மற்றும் 2493/19 ஆகிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகளையும் அங்கீகரிப்பதற்கான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9 புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 வரையிலான காலம் பிரதமரிடம் கேட்கப்படும் வினாக்களுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரையிலான காலம் வாய்மூல விடை எதிர்பார்க்கும் வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்னர் மு.ப 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலம் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாதுகாப்பு பதவி நிலை பிரதானி (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.
பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளை வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.























