Aug 28, 2026 - 10:33 PM





போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ், நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அது தொடர்பான கல்வி குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (28) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இத்தகைய எண்ணிக்கையிலான மரணங்கள் நாளாந்தம் ஏற்படுவதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டில் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணியாக புகைப்பிடித்தல் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், மதுபானப் பாவனையினால் மாத்திரம் நாளொன்றுக்கு 10 முதல் 15 மரணங்கள் வரை பதிவாவதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு பிரதான ஆரம்பப் புள்ளியாக சட்டப்பூர்வமான போதைப்பொருட்களே அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதற்கமைய, ஹெரோயின் பாவிக்கும் நபர் ஒருவர் அதற்கு முன்னர் புகைப்பிடிப்பதற்கு அடிமையாகியிருந்ததாகவும், கஞ்சா பாவிப்பவரும் அதற்கு முன்னர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகியிருந்தவரே எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கான சான்றுகளும் தரவுகளும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
"இலங்கையில் பல சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டிற்கான காரணம், இந்தச் சட்டப்பூர்வமான போதைப்பொருட்களிலிருந்து கிடைக்கும் தொடக்கமாகும். இலங்கையில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் பிரதான காரணியாக புகைப்பிடித்தல் அமைகிறது. ஹெரோயின் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், ஹெரோயின் பாவனைக்கு முன்னர் புகைப்பிடித்துள்ளனர் என்பதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. அதேபோல் தான், கஞ்சா பயன்படுத்துவதற்கு முன்னரும் பெரும்பாலானோர் மதுபானம் அல்லது சிகரெட்டுகளையே பயன்படுத்தியுள்ளனர். போதைப்பொருட்களுக்கு இடையே இதுபோன்றதொரு தொடர்பு காணப்படுகிறது.
இரண்டாவது விஷயம் இதனால் ஏற்படும் பாதிப்பாகும். இதன் மூலம் ஏற்படும் பொருளாதார, சமூக மற்றும் சுகாதாரப் பாதிப்புகளைப் பற்றி புதிதாகக் கூற வேண்டியதில்லை. இருப்பினும், சில முக்கியமான விஷயங்களைக் கூற வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான உயிர்களைப் பறிக்கும் ஒரே காரணி போதைப்பொருள் மட்டுமே. அதில், புகைப்பிடித்தல் காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு அதிக எண்ணிக்கையிலானோர் நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். அதேபோல் மதுபானம் காரணமாக நாளொன்றுக்கு 10-15 இடைப்பட்ட எண்ணிக்கையிலானோர் உயிரிழக்கின்றனர். மேலும், ஏனைய போதைப்பொருட்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இன்னும் சரியான ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மதிப்பிடப்பட்ட சான்றுகள் மற்றும் தரவுகளைப் பார்த்தால், பொதுவாக நாளொன்றுக்கு 10-15 இடைப்பட்ட எண்ணிக்கையிலானோர் உயிரிழக்கின்றனர். இதன்படி, ஒரு சாதாரண நாளில் சராசரியாக 80-100 இடைப்பட்ட எண்ணிக்கையிலானோர் போதைப்பொருட்களினாலேயே உயிரை இழக்கின்றனர். இந்த மரணங்களைப் பார்க்கும்போது, இத்தகைய மரணங்களை ஏற்படுத்தும் வேறு எந்தவொரு தனிப்பட்ட காரணியும் இல்லை என்றே கூறலாம்." என்றார்.























