Sep 9, 2026 - 07:02 PM

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது, தேசிய நெருக்கடிகள் மற்றும் 'டித்வா' புயலினால் ஏற்பட்ட பேரழிவுச் சூழலின் போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்குப் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்திய அரசாங்கத்தினால் மனிதநேய மற்றும் பேரழிவு நிவாரண சேவைகளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட "ஒப்பரேஷன் சாகர் பந்து" (Operation Sagar Bandhu) நடவடிக்கையையும் அவர் பெரிதும் பாராட்டினார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கு அப்பாற்பட்டு, கலாசார, வரலாற்று மற்றும் மத பிணைப்புகளால் போஷிக்கப்பட்ட ஒரு நீண்டகால நட்புறவாகும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு பரந்த துறைகளில் இலங்கைக்கான முக்கிய பங்காளியாக இந்தியா விளங்குவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்றம் மற்றும் அரச துறைகளின் திறன்விருத்தி, நிறுவன ஆற்றல்களை வலுப்படுத்துதல் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றிற்காக இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்பட்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், அந்தப் பங்களிப்பைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதோடு வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.
அறிவுப் பரிமாற்றம், கண்டுபிடிப்புகள் மற்றும் திறன் விருத்தியை அதிகரிப்பதற்காக இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) உள்ளிட்ட விசேட கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை அவர் சுட்டிக்காட்டியதாக பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



























