Sep 11, 2026 - 10:45 PM

Clean Sri Lanka செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "பசுமைப் பாதை" - "நாட்டிற்கு ஒரு சுவாசம் - வீதிக்கு ஒரு நிழல்" எனும் தொனிப்பொருளிலான வீதி ஓரங்களில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் முதற்கட்டமாக, 100,000 மரக்கன்றுகளை நடும் திட்டம் (Roadside Tree Planting Programme) தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்திற்கு பரந்த அளவிலான பொதுமக்களின் பங்களிப்பை பெறுவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வீதி ஓரங்களில் வசிக்கின்ற மக்கள், பாடசாலை சமூகத்தினர், தனியார் துறையினர், தொழில்முனைவோர் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியோரின் தீவிர பங்களிப்பைப் பெறுவது குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான A மற்றும் B தர வீதிகளின் இருமருங்கிலும் சுற்றுச்சூழல் வலயங்களுக்கு பொருத்தமான மர வகைகளைப் பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்படி பூமருது, பாலை, தான்றி, புளிய மரம், கொன்றை, மஞ்சள் கொன்றை, புங்க மரம், ஆத்தி, பிஹிம்பியா, ஆனைக்குன்றிமணி, கொக்கட்டி, விளா மரம், காட்டு மாமரம், நாகமரம், வேப்ப மரம், ரோபோசியா, கருங்காலி, நாவல் மரம், வெரலிக்காய் மரம், முள் சீத்தா, பலா மரம், மாமரம், மந்தாரை, இலுப்பை, மருத மரம், காட்டு மாமரம், வில்வம் உள்ளிட்ட பலவகையான தாவரங்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகளின் பாதுகாப்பு (Guard Mesh) குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வளி மாசடைதலை குறைத்தல் மற்றும் பயணிகளுக்கு வசதியான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தின் மூலம் கொழும்பு, கம்பஹா, குருணாகல், காலி போன்ற நகரங்களில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், அழகியலை மேம்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பியகம, கட்டுநாயக்க மற்றும் சீதாவக்க போன்ற தொழிற்சாலைகளில் வளி மாசடைதலை கட்டுப்படுத்துவதும், புகையை இயற்கையாக உறிஞ்சக்கூடிய சூழலை உருவாக்குவதும் இத்திட்டத்தின் ஒரு நோக்கமாக அமைகின்றது.
இந்த பாரிய திட்டத்தை முன்னெடுப்பதில் Clean Sri Lanka செயலகம், வனவளப் பாதுகாப்பு திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப் படை இன்னும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணையவுள்ளன.





























