Sep 18, 2026 - 12:08 PM

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள், சட்டவிரோதமாகக் காய்ச்சப்படும் மலிவு விலைச் சாராயங்களை அருந்துவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறான சட்டவிரோதச் சாராயங்களின் வீரியத்தை அதிகரிப்பதற்காக அபாயகரமான வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால், அவை விஷச்சாராயமாக மாறி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒண்டோ (Ondo) மாநிலத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல இவ்வாறான சாராயத்தை அருந்தியுள்ளனர்.
அவர்கள் அருந்திய சாராயத்தில் உயிருக்கு ஆபத்தான 'மெத்தனால்' (Methanol) என்ற நச்சு வேதிப்பொருள் கலக்கப்பட்டிருந்தமை பின்னர் தெரியவந்தது. சாராயத்தை அருந்திய சில மணிநேரங்களிலேயே பலருக்குக் கடுமையான வயிற்று வலி, கண்பார்வை மங்குதல், மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி மயக்கம் என்பன ஏற்பட்டுள்ளன.
இந்த நச்சுச் சாராயத்தை அருந்தியவர்களில் இதுவரை 48 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 100 இற்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, பல்வேறு வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அம்மாகாணத்தின் சுகாதாரத் துறை ஆணையர் பன்ஜி அஜாகா தெரிவிக்கையில், "இந்த நச்சுச் சாராயத்தை அருந்தியவர்களின் சிறுநீரகம், மூளை மற்றும் கண்கள் மிக வேகமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 182 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நைஜீரிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு, நச்சுச் சாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உட்பட 15 பேரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நைஜீரியா முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





























