Mar 3, 2026 - 03:43 PM -
0
இலங்கையின் முதன்மையான முஸ்லிம் கலாசார விழாவும், கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து மேல் மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் ஒரு முக்கிய திட்டமுமான ‘சலாம் ரமழான் 2026’, கிரீன் பாத் (Green Path) பகுதியில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது விசுவாசம், கலாசாரம் மற்றும் ஒன்றிணைந்த வாழ்வின் மூன்று நாள் துடிப்புமிக்க கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
மேல் மாகாண கௌரவ ஆளுநர் மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் ஆகியோர் நெலும் பொகுண நுழைவாயிலுக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து ஆரம்ப விழா நிகழ்வுகள் தொடங்கின. அங்கு இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்களால் அவர்கள் வரவேற்கப்பட்டனர். ஒற்றுமையின் அடையாளமாக, மலாய், மூர், மேமன் மற்றும் தாவுதி போரா சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் அதிதிகளுடன் பிரதான மேடைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். உற்சாகம் நிறைந்த காலி கொழும்பு (Kali Kolombo) நடனக் குழுவினர் இந்த ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றனர்.
நிகழ்வின் தேசிய மற்றும் உள்ளடக்கிய தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரிய மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தனது வரவேற்புரையில் உரையாற்றிய தலைவர், ‘சலாம் ரமழான்’ என்பது ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரித்தான கொண்டாட்டம் அல்ல, மாறாக மதம் அல்லது பின்னணி வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் ரமழான் மாதத்தின் தாராள மனப்பான்மை, இரக்கம் மற்றும் ஒற்றுமை ஆகிய விழுமியங்களை அனுபவிப்பதற்கான ஒரு திறந்த அழைப்பாகும் என்று வலியுறுத்தினார்.
கொழும்பு மாநகர முதல்வர் தனது உரையில், உள்ளடக்கிய தன்மை மற்றும் கலாசார ஈடுபாட்டிற்கான கொழும்பின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேல் மாகாண கௌரவ ஆளுநர், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் இத்தகைய கௌரவமான தளத்தை உருவாக்கியதற்காக ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார்.
கௌரவ ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்களால் ‘சலாம் ரமழான்’ விழா விளக்குகள் உத்தியோகபூர்வமாக ஒளிரூட்டப்பட்டது அன்றைய இரவின் சிறப்பம்சமாக அமைந்தது. இது கிரீன் பாத் பகுதியை ஒரு பிரகாசமான ரமழான் வீதியாக மாற்றியது.
2026 பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை, மாலை 5.00 மணி முதல் நள்ளிரவு வரை, கிரீன் பாத் (ஆனந்த குமாரசுவாமி மாவத்தை) பகுதியில் 120-க்கும் மேற்பட்ட உணவு மற்றும் சில்லறை விற்பனைக்கூடங்கள், கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரியக் கண்காட்சிகள், அரபு எழுத்துக்கலை (Calligraphy), மருதாணி கலை மற்றும் குடும்பங்களுக்கான பிரத்யேக அனுபவங்கள் இடம்பெறவுள்ளன.
சிறுவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘கிட்ஸ் ஸோன்’ (Kids’ Zone) பாதுகாப்பான பொழுதுபோக்கு இடமாகவும், வருகை தருவோர் வசதியாகத் தமது மதக் கடமைகளை நிறைவேற்றத் தொழுகை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடும்பங்கள், இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பார்வையாளர்களை இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இலங்கையின் முஸ்லிம் சமூகங்களின் உணவு மரபுகள், கலை வெளிப்பாடுகள் மற்றும் கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பான மற்றும் கொண்டாட்டமான சூழலில் அனுபவிக்க ‘சலாம் ரமழான்’ ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
முழு நாட்டிற்கும் சொந்தமான இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ‘சலாம் ரமழான் 2026’ ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுக்கின்றது.