Mar 20, 2026 - 02:34 PM -
0
சமூக ஈடுபாடு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றுக்கான தமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், SLT-MOBITEL இனால் விசேட இப்தார் ஒன்றுகூடல், கம்பளை அல்-மிஸ்பஹிய்யா அரபுக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கை, பாடசாலைச் சமூகத்துடன் ரமழானின் உயரிய விழுமியங்களைப் பகிர்ந்துகொள்வதையும், அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அரபுக் கல்லூரி மற்றும் அதன் மாணவர்களுக்குத் தேவையான ஆதரவினை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு அமைந்திருந்தது. அல்-மிஸ்பஹிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷேக் ஹிஷாம் முப்தி, பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் சுமார் 60 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது SLT-MOBITEL நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஏ.எம். சியாம் உட்பட கம்பளை காரியாலயக் குழுவினர் மற்றும் SLT தலைமையக உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த செயற்பாட்டின் ஒரு அங்கமாக, மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்வதற்கு உதவும் வகையில், SLT-MOBITEL இனால் அவசியமான பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. புனித ரமழான் மாதத்தில் இந்த இப்தார் ஒன்றுகூடலானது, சகோதரத்துவத்தையும் ஆத்மீகச் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்ததோடு, இக்கட்டான காலப்பகுதியில் சமூகங்களுக்குத் தோள்கொடுப்பதிலும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதிலும் SLT-MOBITEL கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீளுறுதிப்படுத்தியது.
அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் கிடைக்கப் பெற வேண்டுமென வாழ்த்துவதோடு, SLT-MOBITEL தனது மனமார்ந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
