Mar 23, 2026 - 03:57 PM -
0
எரிபொருள் மற்றும் சக்தி வளங்களை சேமிப்பதற்காக தற்காலிக நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், எப்போதும்போல் வங்கிகள் அத்தியாவசிய சேவை வழங்குநராக வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் தொடர்ந்து செயல்படும் என்று இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
இதற்கிணங்க, வங்கிகள் திங்கள் முதல் வெள்ளி வரை, புதன்கிழமையையும் உட்பட திறந்திருக்கும். ஆனால் புதன்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே சேவைகள் வழங்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் வாரம் முழுவதும் எந்த இடையூறும் இல்லாமல் அடிப்படை வங்கி சேவைகளைப் பெற முடியும்.
இந்த காலப்பகுதியில் தேசிய முன்னுரிமைகளை ஆதரிக்கும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA), வாடிக்கையாளர்கள் அன்றாட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மொபைல் வங்கி செயல்கள் மற்றும் இணைய வங்கி தளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் மற்றும் இணைய வங்கி ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துமாறுகோரிக்கை விடுத்துள்ளது. மேலும், பயணங்களை சீரமைத்து, அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வங்கிக்கிளைகளுக்கு வருகை புரியுமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் எரிபொருள் மற்றும்சக்தி வளங்களை பாதுகாக்கும் விரிவான முயற்சிகளுடன் இணங்குகின்றன என்றும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, எங்கு சாத்தியமோ அங்கு தேவையற்ற ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் தேசிய முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்குமாறும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்கும் தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் குறுகிய காலத்தில் சீரடையும் எனவும் இலங்கையின் பொருளாதாரம் நீண்டகாலத் தடங்கலின்றி தனது முன்னோக்கிய பயணத்தைத் தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கிகள் சங்கம் என்பது நாட்டில் உள்ள அனைத்து அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளையும் மற்றும் அனுமதிக்கப்பட்ட சிறப்பு வங்கிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உயர் அமைப்பு ஆகும்.
