May 6, 2026 - 10:15 PM -
0
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணையாளர்களாக வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு சந்தேக நபர்களும் வாழைத்தோட்டம் பொலிஸாரால் நேற்று (5) பிற்பகல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள சாஞ்சி ஆராச்சிவத்த பகுதியில் வசிக்கும் மொஹமட் ரிஸ்வான் மற்றும் மொஹமட் இர்ஷான் ஆகிய இரு சந்தேக நபர்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது வாழைத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த இரு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் உள்ள கபில சந்திரசேனவை அறியாதவர்கள் என்றும், தலா 15,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணையாளர்களாக முன்னிலையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பிணை பெறுவதற்காக வந்த இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான நிலை ஏற்பட்டதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரமே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுக்கு முறையான தொழில் அல்லது வருமான வழி இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா, பிணைக்காக இவர்கள் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டமை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
