May 27, 2026 - 09:19 AM -
0
எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் கனடாவுக்குள் நுழைவதையும், அது நாட்டில் பரவுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 'புந்திபுக்யோ' வகை எபோலா வைரஸ் தேசிய தொற்றுநோய் நிலையை எட்டுவதற்கான அபாயம் "மிகவும் அதிகம்" என்று உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது.
இதற்கிடையில், கடந்த வாரங்களில் இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கும் அமெரிக்கா கடந்த வாரம் தடை விதித்திருந்தது.
இருப்பினும், இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்த, ஆனால் நோய் அறிகுறிகள் இல்லாத கனடியப் பிரஜைகள், நிரந்தர வதிவிட உரிமம் கொண்டவர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் மே 30 முதல் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
அமெரிக்கா, கனடா அல்லது பஹாமாஸ் ஆகிய நாடுகளில் இதுவரை எந்தவொரு எபோலா நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

