Aug 10, 2026 - 10:54 AM

ஒரு முழுமையான கிரிக்கெட் வாழ்க்கையில்கூட பலரால் எட்டமுடியாத சாதனைகளை வெறும் 15 வயதில் படைத்து உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்தியாவின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
2026 U19 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி முக்கிய பங்காற்றினார்.
இராஜஸ்தான் இராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் 2026 ஐபிஎல் தொடரை தனது துடுப்பாட்டத்தால் ஆக்கிரமித்தார்.
2026 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 776 ஓட்டங்களை குவித்த அவர், ஒரே தொடரில் 4 முக்கிய விருதுகளை கைப்பற்றினார்.
776 ஓட்டங்களை குவித்து ஆரஞ்சு தொப்பியும், தொடரின் மதிப்புமிக்க வீரர் விருது, சீசனின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் மற்றும் சூப்பர் ஸ்டிரைக்கர் ஆகிய முக்கிய விருதுகளை குவித்தார்.
பெரும்பாலான வீரர்கள் 15 வயதில் மாநில அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், வைபவ் சூர்யவன்ஷி உலகக் கிண்ணம், ஐபிஎல் மற்றும் இந்தியா 'ஏ' அணியில் சாதனைகளை குவித்து வருகிறார்.
ஆனாலும், வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து வெளிநாடுகளில் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்நிலையில், அஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ, இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை பாராட்டியுள்ளார்.
அவர் ஓர் அற்புதமான வீரர். இந்தியாவுக்கு வெளியே உள்ள அனைவரும் அவர் 15 வயதுடையவரா என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறார்கள்.
அவருக்கு 15 வயதுதானா? என்பதுதான் உலகளவில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
அவருக்கு என்ன வயது என்பது எனக்கு முக்கியமல்ல. அவருக்கு 15 வயது என்றால் அது மிகச் சிறப்பு, ஆனால் 17 அல்லது 18 வயதாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை என்ன?
இந்தச் சிறுவனால் சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும். இந்தியாவிற்குக் கிடைத்த ஒரு சிறந்த வரப்பிரசாதம் இவர். வருங்காலத்தில் இன்னும் பல பெரிய சாதனைகளை இவர் படைப்பார் என தெரிவித்தார்.













