Aug 10, 2026 - 11:15 AM

நாடுகளின் டிஜிட்டல் தயார்நிலை மற்றும் போட்டித்திறனை அளவிடுவதற்கான ஒரு புதிய சுட்டெண் குறியீட்டை அறிமுகப்படுத்தும் ஒரு சர்வதேச ஆய்வின் மூலம், டிஜிட்டல் மாற்றம் குறித்த உலகளாவிய ஆராய்ச்சிக்கான தனது பங்களிப்பை SLIIT Business School வலுப்படுத்தியுள்ளது.
“டிஜிட்டல்மயமாக்கல் இயக்கவியல்: டிஜிட்டல் முன்னோடிகள், ஏற்பவர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கான உலகளாவிய சுட்டெண் குறியீட்டை உருவாக்குதல் (Digitalisation Dynamics: Developing a Global Index for Digital Pioneers, Adapters, and Followers) என்ற இந்த ஆய்வை, SLIIT Business School-இன் பேராசிரியர் ருவான் ஜெயதிலக, பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்ற ஆராய்ச்சியாளர்களான திரு. உஷான் குமார மற்றும் திரு. டிலான் விஜேரத்ன ஆகியோருடன் இணைந்து நடத்தினார். இது, அதன் பாடப்பரப்பில் Scopus-சுட்டெண் குறியிடப்பட்ட சஞ்சிகைகளில் முதல் 1% இடத்திற்குள் தரவரிசைப்படுத்தப்பட்ட, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சஞ்சிகையான Journal of Open Innovation: Technology, Market, and Complexity- இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
2010 முதல் 2022 வரை 71 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆராய்ச்சி, இணையப் பயன்பாடு, மொபைல் இணைப்பு, புரோட்பாண்ட் அடைவுமட்டம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப ஏற்றுமதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடு, காப்புரிமை செயல்பாடு, இணையப் பாதுகாப்பு கட்டமைப்புகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத் திறன் உள்ளிட்ட குறிகாட்டிகளைப் பயன்படுத்தி ஒரு டிஜிட்டல்மயமாக்கல் சுட்டெண் குறியீட்டை உருவாக்கியுள்ளது. இந்த அளவீடுகளின் அடிப்படையில், நாடுகள் டிஜிட்டல் முன்னோடிகள், டிஜிட்டல் ஏற்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் பின்தொடர்பவர்கள் என வகைப்படுத்தப்பட்டன.
டிஜிட்டல் போட்டித்திறன் என்பது தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. அது புத்தாக்கம், மனித மூலதனம், இணையப் பாதுகாப்பு, ஆராய்ச்சி முதலீடு, நிறுவனத் தயார்நிலை மற்றும் நீண்டகாலக் கொள்கை வழிகாட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த சூழலமைப்பைச் சார்ந்துள்ளது. முக்கியத் தொழில்துறைகள் முழுவதும் டிஜிட்டல் மாற்றம் பெருகிய முறையில் இன்றியமையாததாகி வரும் இலங்கை போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் குறிப்பாகப் பொருத்தமானவை.
“டிஜிட்டல்மயமாக்கல் என்பது இனி ஒரு விருப்பத்திற்குரிய தெரிவு அல்ல. அது பொருளாதாரப் போட்டித்திறன், வணிக நிலைபேற்றியல் மற்றும் தேசிய வளர்ச்சி ஆகியவற்றின் முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது. டிஜிட்டல் முறையில் தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தவறும் நாடுகளும் நிறுவனங்களும் பின்தங்கிவிடும் அபாயத்தில் உள்ளன, என்று பேராசிரியர் ஜெயதிலக கூறினார்.
இந்த ஆய்வு, பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் சர்வதேச அளவில் பிரசுரிக்கப்படும் படைப்புகளில் மாணவர்களின் ஈடுபாடு ஆகியவற்றில் SLIIT Business School-இன் வளர்ந்து வரும் கவனத்தையும் பிரதிபலிக்கிறது. கல்வி வழிகாட்டுதல், புள்ளிவிபர தரவுகளுக்கான அணுகல் மற்றும் யதார்த்த உலகச் சவால்களுக்கு ஆட்படுதல் ஆகியவற்றின் மூலம் ஆதரவளிக்கப்படும்போது, இலங்கை மாணவர்கள் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை மேற்குறிப்பிட்ட பட்டப்படிப்பு ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்பு நிரூபிக்கிறது.
டிஜிட்டல் மாற்றம் பொருளாதாரங்களை மறுவடிவமைத்து வரும் இக்காலகட்டத்தில், தொழில்துறை, கொள்கை மற்றும் தேசிய மாற்றத்திற்கு ஆதரவளிப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை இந்த ஆய்வு வலுப்படுத்துகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தின் உந்துசக்திகளைப் புரிந்துகொள்வதில் SLIIT Business School-இன் அணுகுமுறையானது, பெருகிவரும் இந்த புதிய டிஜிட்டல் யுகத்தில் செழித்து வாழ்வதற்கான ஒரு சாத்தியமான முதல் படியாக அமைகிறது.













