Aug 14, 2026 - 12:08 PM

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் பகுதியில் இடம்பெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசப் பணி நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடை உத்தரவுக்கு, இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்குக் கருணை அடிப்படையில் அரசப் பணிகளை வழங்குவதற்கான நியமனக் கடிதங்கள் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த மாதம் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அரசுப் பணி நியமன அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ஜே.பி. பார்த்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, கரூர் சம்பவம் மிகவும் துயரமானது என்றும், இத்தகைய விவகாரங்களில் அரசியல் செய்யக்கூடாது என்றும் சுட்டிக்காட்டிய நீதியரசர்கள், உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர்.























