Aug 14, 2026 - 01:35 PM

செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 100 இற்கும் அதிகமான மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். இந்தப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (14) தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்ப்பாட்டில் வள்ளிபுனம் பகுதியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், பொதுச்சுடரைபொதுச்சுடரை இந்த படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வம் நிறோஜினி தாயார் செல்வம் மேரிபுஸ்பலதா ஏற்றி வைத்தார். தொடர்ந்து உறவுகளால் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.























