Aug 14, 2026 - 08:18 PM

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கி வைக்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, அந்தப் புத்தகங்களை பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு விற்று 47,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தலங்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெளியிடப்பட்ட 19,892 பாடநூல்களை கொண்டு செல்வதற்காக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த பியகம பகுதியிலுள்ள நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன், கடந்த மே மாதம் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியின் சாரதியினால் அப்புத்தகத் தொகுதி பொறுப்பேற்கப்பட்டிருந்தது.
எனினும், புத்தகத் தொகுதி சரியாக ஒப்படைக்கப்படவில்லை என்ற தகவல் கிடைத்ததையடுத்து, கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளைக் ஆரம்பித் பொலிஸார், குறித்த லொறியின் சாரதியைக் கைது செய்ததுடன், அவர் அப்புத்தகத் தொகுதியை எடைக்கு பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு விற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.
அதற்கமைய, அப்புத்தகத் தொகுதியைக் கொள்வனவு செய்த நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அந்தப் பழைய காகிதக் கடைக்காரர் அப்புத்தகங்களை பேலியகொடை பகுதியிலுள்ள பழைய பத்திரிகை மற்றும் காகிதங்களை அரைக்கும் நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.























