Aug 14, 2026 - 09:57 PM

வருடாந்தம் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் இணக்க சபைகளால் தீர்த்து வைக்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய இணக்க தின விழா நிகழ்வில் இன்று (14) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டை இணக்க செயலாக்கத்திற்கு ஒரு விசேட ஆண்டாகக் குறிப்பிட முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இணக்க சபை ஆணைக்குழுவிற்காக 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் தாமதமடைந்திருந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கும், சமரசாளர்களை நியமிக்கும் பணிகளைச் சரியான முறையிலும் சரியான நேரத்திலும் மேற்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் செயற்படும் சமூக அடிப்படையிலான இணக்க சபைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
காணி பிணக்குகள் தொடர்பில் விசேட இணக்க சபைகளை 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கடந்த வருடத்தில் அமைக்க முடிந்தது.
அத்துடன், நீதிமன்றங்களை சென்றடையும் நிதி சார்ந்த பிணக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக விசேட நிதிப் பிணக்குகள் இணக்க சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றின் முதற்கட்டமாக கொழும்பு, கம்பஹா, அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் மொனராகலை ஆகிய 06 மாவட்டங்களில் விசேட நிதிப் பிணக்குகள் இணக்க சபைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டங்கள் மூலம் நீதிமன்றக் கட்டமைப்பிற்கு இருக்கும் அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமன்றி, மக்களுக்கு விரைவான, நியாயமான மற்றும் அமைதியான முறையிலான பிணக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே தமது முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடு முழுவதும் எவ்வித இலாப நோக்கமுமின்றி மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் 9,000 க்கும் மேற்பட்ட சமரசாளர்களின் சேவையைப் பாராட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நாடு முழுவதிலும் உள்ள 332 சமூகச் இணக்க சபைகள் மற்றும் 31 விசேட இணக்க சபைகளை ஒருங்கிணைத்து, இச்செயற்பாட்டிற்குத் தேவையான வசதிகளைச் செய்து தரும் இணக்க சபை ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர்கள், செயலாளர் உள்ளிட்ட முழுப் பணியாளர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.























