Aug 25, 2026 - 05:37 PM





முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக தமது ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற 20,000 மெட்ரிக் தொன் கரிம உரத்தைக் கொண்ட கப்பலை இலங்கைக்கு இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக சந்தேகநபர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
வேறொரு வழக்கு தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால், விசாரணைகளை நிறைவுசெய்து விடயங்களை அறிக்கை செய்வதற்குத் திகதியொன்றை வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், குறித்த வழக்கை மீண்டும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.























