Aug 25, 2026 - 05:45 PM





சிறந்த விற்பனை சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம் ‘ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனைச் சிறப்பு விருது நிகழ்வை ஓகஸ்ட் 20ஆம் திகதி மொனாக் இம்பீரியல் ஹோட்டலில் நடத்தியது.
இலங்கையின் பொதுக் காப்புறுதித் துறையில் SLICGL நிறுவனத்தை முன்னணி நிலையில் நிலைநிறுத்துவதற்குத் தொடர்ச்சியாகப் பங்களித்தவர்களின் செயல்திறன், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் அதற்கான அர்ப்பணிப்பை கொண்டாடும் வகையில், நாடு முழுவதிலுமிருந்து இந்நிறுவனத்தின் விற்பனைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் சிறந்த சாதனையாளர்கள் இதில் ஒன்று கூடியிருந்தனர்.
நிறுவனத்தின் வெற்றியை அடிமட்டத்தில் இருந்து முன்னெடுத்துச் செல்லும் பணியாளர்களுக்கான தனது பாராட்டை உறுதிப்படுத்தும் வகையில், விற்பனை இலக்குகளுக்கு அப்பால் சாதித்தவர்கள், வாடிக்கையாளர்களுடனான உறவுகளை வலுப்படுத்தியவர்கள் மற்றும் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நேரடியாகப் பங்களித்தவர்கள் 2025 விற்பனை சிறப்பு விருது கௌரவித்தது.
இந்நிகழ்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்கிற்கும் அதிகமான சாதனையாளர்கள் இவ்வாண்டு கௌரவிக்கப்பட்டதுடன், நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த செயல்திறனை பிரதிபலிக்கும் பல்வேறு விருதுப் பிரிவுகளின் கீழ் சாதனையாளர்கள் பாராட்டப்பட்டனர்.
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் தலைவர் திரு.நுசித் குமாரதுங்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், SLICGL நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் விசேட விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்கள் விருது பெற்றவர்களின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டி ஊக்குவித்தனர். காப்புறுதி ஆலோசகர்கள், சந்தைப்படுத்தல் முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள், பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் தலைமையக விற்பனைப் பிரிவுகளின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பல்வேறு பிரிவுகளில் வெளிப்படுத்திய சிறந்த சாதனைகளுக்காக இவ்வாண்டு விருது விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
தனிநபர்களின் சிறப்பான செயல்திறனை அங்கீகரிப்பதுடன் மட்டுமல்லாமல், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இலங்கையின் பொதுக் காப்புறுதித் துறையில் அதன் மறுக்கமுடியாத சந்தைத் தலைமைத்துவத்திற்கும் தொடர்ச்சியாக உந்துசக்தியாக விளங்கும் ஒட்டுமொத்த விற்பனை அணியின் ஒருங்கிணைந்த பங்களிப்புக்கும் விற்பனை விருதுகள் 2025 நிகழ்வில் விசேட பாராட்டு வழங்கப்பட்டது.
இந்த விருதுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த SLICGL நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி சமீர தர்மசேன, “இவ்வாண்டு காணப்பட்ட பரந்தளவிலான பங்கேற்பும், பல்வேறு துறைகளில் வழங்கப்பட்ட அங்கீகாரங்களும் எமது பணியாளர்களின் வலிமையையும், எமது வணிகத்தின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன. பல்வேறு பிரிவுகளில் சாதனையாளர்களை கௌரவிப்பதன் மூலம், திறமைகளை வளர்ப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், SLICGL நிறுவனத்தின் அடையாளமாக விளங்கும் கூட்டு சாதனைகளைக் கொண்டாடுவதற்குமான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ‘ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளின் வழிகாட்டுதலுடன், ஒற்றுமையும் பொதுவான நோக்கமும் எவ்வாறு எமது தொழில்துறைத் தலைமைத்துவத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றன என்பதை இந்தச் சாதனைகள் எடுத்துக்காட்டுகின்றன,” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இரவு முழுவதும் கொண்டாட்ட உணர்வும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்ததுடன், சகோதரத்துவம் மற்றும் பொதுவான நோக்கம் ஆகியவை நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் ஒன்றிணைத்தன. ஒத்துழைப்பு, உயர்தர சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதை அடிப்படையாகக் கொண்ட பணிச்சூழலை உருவாக்குவதில் SLICGL நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனத்தையும் இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.























