Aug 25, 2026 - 10:11 PM





இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் இதுவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' மற்றும் 'கூடு நிலங்க' ஆகிய சந்தேகநபர்கள் முதன்முறையாக இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவிக்கையில், கெஹெல்பத்தர பத்மே 13 சிறைச்சாலை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்துள்ளதாக தொலைபேசி அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும், 9 அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை உட்பட பல மனிதக் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே, கொமண்டோ சலிந்த உட்பட 5 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டின் ஒகஸ்ட் 30 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகிய சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு முன்னர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பின்னர், கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகியோர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கருதுரையாற்றிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பின்வருமாறு தெரிவித்தனர்:
"கனம் நீதவான் அவர்களே... இந்தச் சந்தேகநபரிடமிருந்து 8 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றிலிருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்தன. பின்னர் அத்தரவுகள் மீட்டெடுக்கப்பட்டன. அக்கைப்பேசிகளிலிருந்து 8,841 தொலைபேசி அழைப்புகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 326,671 புகைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 1,101 ஒலிப்பதிவுகளும் 5,039 காணொளிகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்துரைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்:
கனம் நீதிவான் அவர்களே... அந்த கைப்பேசி தரவுகளை பகுப்பாய்வு செய்தபோது 20 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்தன.
அது குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு அறியத்தரப்பட்டது. அவரது தொலைபேசிகளிலிருந்து 13 சிறைச்சாலை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு பேணப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது.
அது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளோம். 7 நடிகைகள் மற்றும் மாடல்கள் பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன. 9 அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டனர்.
இந்தச் சந்தேகநபரின் கைப்பேசியில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்களில், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களின் 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் காணப்படுகின்றன.
இதுதவிர, 17 வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சந்தேகநபர் 2021 மே 21 முதல் சட்டப்பூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு சென்றுள்ளார். இவர் டுபாய், ஜப்பான், இந்தோனேசியா, ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா, லாவோஸ் உட்பட 13 நாடுகளுக்கு சுமார் 15 சந்தர்ப்பங்களில் சென்றுள்ளார்.
சந்தேகநபரிடம் 21 துப்பாக்கிகள் இருந்த நிலையில், அவற்றில் 19 துப்பாக்கிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனவே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமிந்த அத்துகோரள நீதிமன்றில் தெரிவிக்கையில், வெலிசர சிறைச்சாலையில் இந்தச் சந்தேகநபரின் எதிராளிகள் இருப்பதால், இவரை வெலிசர தவிர வேறு எந்தவொரு சிறைச்சாலையிலும் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரினார்.
பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரம சந்தேகநபரிடம் ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளதா எனக் கேட்டறிந்தார்.
அதற்குப் பதிலளித்த கெஹெல்பத்தர பத்மே.....
கனம் நீதவான் அவர்களே, எனக்கு கல்லீரலில் பாதிப்பு உள்ளது. கொழுப்பு படிந்து தோலில் படிகிறது. வெளிநாட்டில் இருந்தபோது சிகிச்சை பெற்றேன். இங்கு சிகிச்சை பெறவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவிக்கையில், இவர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கின் 18 ஆவது சந்தேகநபர் அல்லது பிரதான சந்தேகநபர் என தெரிவித்தனர்.
சந்தேகநபருக்குத் தொடர்பாடல் சாதனங்கள் கிடைத்தால் விசாரணைகளுக்குத் தடை ஏற்படக்கூடும் என்பதால், அவரை வெலிசர சிறைச்சாலையில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரினர்.
முன்வைக்கப்பட்ட காரணங்களைக் கருத்திற் கொண்ட நீதிவான், இந்தச் சந்தேகநபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்போது சந்தேகநபரை மிகவும் பாதுகாப்பான பொருத்தமான சிறைச்சாலையொன்றில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
மேலும், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த காரணங்களை பரிசீலித்த நீதிவான், இந்தச் சந்தேகநபரை எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வேறொரு வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.
அதேபோன்று, இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலங்க சம்பத் சில்வா எனப்படும் 'பாணந்துறை நிலங்க' என்பவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரையும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.























