Aug 25, 2026 - 07:45 PM





22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வைக் கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்பினால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக, சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்பின் செயலாளரும் சட்டத்தரணியுமான செல்வி அனுராதா லக்மினி குருகேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் சில ஏற்பாடுகளினூடாக தற்போது பதவியிலுள்ள நீதியரசர்களுக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படுவதால், இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கும், அதிகாரப் பகிர்வு தத்துவத்திற்கும், அதிகாரக் கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையைப் பேணுவதற்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என குறித்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் மக்களின் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், ஆனால் இந்த அரசியலமைப்புத் திருத்தமானது போதுமான மக்கள் கலந்துரையாடல்கள் இன்றியும் வெளிப்படைத்தன்மையின்றியும் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டவொரு திருத்தம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறைமைக்கும், 4 (இ) உறுப்புரையின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள மக்களிடமிருந்து பிரிக்க முடியாத இறைமை அதிகாரத்திற்கும் இத்திருத்தத்தின் மூலம் நேரடியான பாதகமான தாக்கம் ஏற்படும் எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்நாட்டுச் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள நீதித்துறையின் சுயாதீனம் என்ற தலைப்பின் கீழான உறுப்புரைகளில் மேற்கொள்ளப்படும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் தேவையான பெரும்பான்மைக்கு மேலதிகமாக, மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியே குறித்த மகளிர் அமைப்பினால் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.























